சென்னை: துபாயில் இருந்து எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (36), முகமது அசார் (28) ஆகிய இருவரும், சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று, சென்னை திரும்பி வந்திருந்தனர். அவர்கள் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, முகமது கனியின் சூட்கேஸில் பண்டல் பண்டலாக வெளிநாட்டு சிகரெட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 6,400 சிகரெட் பாக்கெட்கள் இருந்தன. அதன் மதிப்பு 1 லட்சம் அதை பறிமுதல் செய்து அனுப்பினர்.
பின்னர், அவர்கள் சூட்கேஸை எடுத்துக் கொண்டு செல்லும்போது இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு காலடி எடுத்து வைத்தனர். அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, முகமது கனியின் ஆசனவாயில் 307 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன் மதிப்பு 12.2 லட்சம். இதேபோல் முகமது அசாரின் ஆசனவாயில் 455 கிராம் தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு 17.8 லட்சம். இருவரிடமும் ₹30 லட்சம் மதிப்புள்ள 765 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.