சென்னை: பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காததால், தறிகெட்டு ஓடி சிக்னலில் காத்திருந்த வாகன ஓட்டிகள் மீது மோதியது. இதில், 5 பேர் காயமடைந்தனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னலில் நேற்று வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது, சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் (தடம் எண் 578) திடீரென பிரேக் பிடிக்காததால் தறிகெட்டு ஓடி, சிக்னலுக்காக காத்திருந்த 2 பைக்குகள் மற்றும் கார் மீது மோதியது.
இதில், வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார் வாகனங்கள் மீது மோதி நின்ற அரசு பஸ்சை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். தப்பியோடிய பஸ் டிரைவர், கண்டக்டரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.