×

காலாண்டு முடிந்த பின்னரும் தீர்வு இல்லை பிளஸ் 2 முக்கிய வகுப்புகளுக்கு புத்தகம், ஆசிரியர் தட்டுப்பாடு

நெல்லை: பிளஸ் 2 வகுப்பில் அரசுப் பள்ளிகளில் முக்கிய பிரிவுகளுக்கு பாடப்புத்தகம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. காலாண்டு முடிந்த பின்னரும் ஆசிரியர் தட்டுப்பாடு நீடிப்பதால் பெற்றோர், மாணவர் கவலையடைந்துள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில் 12, 10ம் வகுப்பு உள்ளிட்ட சில வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்பட்டன.  12ம் வகுப்பிற்கு உரிய பல பாடப்பிரிவுகளின் புத்தகங்கள் பள்ளிகள் திறந்த பின்னரும் மாணவர்கள் கைகளில் கிடைக்கவில்லை. இதனால் ஆன்லைனில் டவுன்லோடு செய்து ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து சமாளித்தனர். ஆயினும், புத்தகம் இல்லாததால் மாணவர்களுக்கு பிராக்டிக்கல் ஒர்க் போன்ற பணிகளை கொடுப்பதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் உள்ளது.
குறிப்பாக ‘உயிரி விலங்கியல்’ என்ற பாடப்புத்தகம் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் பலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. காலாண்டு முடிந்த பின்னரும் இந்த பாடப்புத்தகம் கிடைக்காததால் இதனை நடத்தும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுபோல் காலாண்டுக்கு பின்னர் இயற்பியல், வேதியியல் 2ம் தொகுதி பாடப்புத்தகம் கடந்த 3ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதும் வழங்கப்படும் என எதிர்பார்த்து மாணவர்கள் வந்திருந்தனர். ஆனால் இந்த பாடப்புத்தகமும் கிடைக்காத பள்ளிகளில் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் சில பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பில் கணிதம், அறிவியல் போன்ற பல முக்கியப் பாடங்களுக்கு பாடம் நடத்த நிரந்த ஆசிரியர் இல்லை. சில பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் ₹10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து சமாளிக்கின்றனர். சில பள்ளிகளுக்கு இந்த நிதியை விடுவிப்பதில் தாமதம் மற்றும் குறைந்த சம்பளத்தில் பாடம் நடத்த தகுதியான தற்காலிக ஆசிரியர்கள் கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களாலும் தடுமாற்றம் நீடிக்கிறது. இதுகுறித்து பிளஸ் 2 பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறுகையில், ‘பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் தருவதில்லை. இதுபோன்ற காரணங்களால் பிளஸ்2 கல்வித்தரம் குறைந்து வருகிறது. எனவே, பிளஸ்2 மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்களை தாமதமின்றி வழங்குவதுடன் ஆசிரியர் காலிப் பணியிடங்களை இனியும் தாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும்’’ என்றனர்.

Tags : classes , Quarterly, plus 2, book, author
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார்...