×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை: மின்னணு இயந்திரத்தில் பதிவான கடைசி 3 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிந்தது

சென்னை: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட கடைசி 3 சுற்று வாக்குகளின் மறு எண்ணிக்கை முடிந்தது. எண்ணப்படாத 203 வாக்குகள் உள்பட 1,508 தபால் வாக்குகளும் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கடந்த 2006ல் பதிவு செய்யப்பட்ட கடைசி 3 சுற்றுகளின் வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது. 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கையில் 17 மேஜைகள் அமைத்து மொத்தம் 2 சுற்றுகளில் வாக்குகளை எண்ண திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி எம்எல்ஏ இன்பதுரை, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என உத்தரவிட்டது. அதன்படி மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த மறு வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக 24 அதிகாரிகள் மற்றும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர்கள் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல, தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவருடன் ஒரு வழக்கறிஞர் என 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு செல்போன் போன்ற சாதனைகளை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வருகிறது. காலை 11.30 மணி அளவில் இந்த மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், கடைசி 3 சுற்றில் பதிவான மின்னணு வாக்குகளின் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. எண்ணப்படாத 203 உள்பட 1,508 தபால் வாக்குகளின் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்ணிக்கையின் முடிவில் யார் வெற்றி பெற்றது என்பது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Radha Puram Volume Recalculation ,rounds ,voting , Radapuram constituency, repeat count, vote count of 3 rounds
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...