சேலம்: சேலத்ைத அடுத்த சங்ககிரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு கொடுத்த மாத்திரைக்குள் ெசம்புக்கம்பி இருந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள், சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ளது மோரூர் கிராமம். இங்குள்ள தேவேந்திரர் தெருவைச் சேர்ந்த தனலட்சுமி-கோபாலகிருஷ்ணன் தம்பதிகளுக்கு மகானிஷா (8), கனிஷ்கா (6) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகானிஷாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக, புள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தாய் அழைத்துச் சென்றுள்ளார்.
மகளை சோதித்த பிறகு, மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மகளுக்கு கொடுக்க மாத்திரையை இரண்டாக உடைத்துள்ளார். அப்போது மாத்திரையில் செம்பு கம்பி இருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கிராமத்து மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு புள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்து மருத்துவர் மற்றும் செவிலியரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்ததும் சங்ககிரி போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பினர். சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் கேட்டபோது, மாத்திரைக்குள் எப்படி கம்பி வந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. இது குறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் மாத்திரை எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்,’’ என்றனர்.