புதுடெல்லி: மொரீஷியஸ் நாட்டின் மெட்ரோ ரயில் சேவை, சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படும் மத்திய அரசு, அண்டை நாடுகளான இலங்கை, மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் ஆகியவற்றுடனான உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் மெட்ரோ ரயில் சேவை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உடன் இணைந்து காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:இந்த திட்டங்கள் மொரீஷியசின் மேம்பாட்டில், வளர்ச்சியில் இந்தியா கொண்டுள்ள அக்கறைக்கு எடுத்து காட்டாகும். இந்த சிறப்பு மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படும். இதன் அனைத்து பரிவர்த்தனைகளும் காகிதமற்ற முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இது போன்ற மேலும் சில மருத்துவமனைகள் மொரீஷியசில் உருவாக்கப்படும். மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் இது போன்ற மக்கள் நலத் திட்டங்களில் மொரீஷியஸ் அரசுடன் இணைந்து பணியாற்றுவது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. மெட்ரோ ரயில் நேரத்தை மிச்சப்படுத்தும் போக்குவரத்து சேவையாகும் என்றார்.