புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலம் வரும் 2024 வரை உள்ள நிலையில் கடந்த ஆகஸ்டில் காலமானார். இதேபோல் பீகாரில் இருந்து ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருந்த பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியும் சமீபத்தில் காலமானார். இதையடுத்து ஏற்பட்ட 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான காலியிடங்களுக்கு பாஜ வேட்பாளர்கள் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதியும், பீகாரில் இருந்து சதிஷ் சந்திர துபேயும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜ பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவருதால் சுதான்சு எம்பியாவது உறுதியாகியுள்ளது. இதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பாஜ உள்ளதால் பீகாரில் துபே தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.