புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
28 நாட்களாக திகார் சிறையில் ப.சிதம்பரம்
*ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
*இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.
*பின்னர், அவரை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
*சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்தது.
*இதையடுத்து மீண்டும் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் அமர்வு நாளை விசாரிக்கிறது.
அக்டோபர் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு:
*இந்நிலையில் 28 நாட்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம், நீதிமன்ற காவல் முடிந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபட்டார்.
*அப்போது ப. சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ கோரியது. இதையேற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.