மதுரை : ராமநாதபுரம் எஸ்.பி. அக்டோபர் 15-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று இலங்கையை சேர்ந்த குற்ற பின்னணி உள்ள இருவரை இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்காமல் புழல் சிறையில் இருந்து விடுவித்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
வழக்கின் பின்னணி
இலங்கையில் கொழும்பு நகரைச் சேர்ந்த வாலிபர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்ததால் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, அவர்கள் மீதான குற்றச்சாட்டை திரும்ப பெறுவதாக கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனு அடிப்படையில் அவர்களை விடுவித்து மாஜிஸ்திரேட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி உத்தரவிட்டார். அதை ஜாமீனில் விடுவிக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதாக கருதிய சிறை அதிகாரிகள், இலங்கை வாலிபர்களை கடந்த 18-ந்தேதி விடுவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. எந்த அடிப்படையில் அவர்களை விடுவித்தனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு உத்தரவை, ஜாமீனில் வெளியில் விட வேண்டும் என்று தவறாக புரிந்து இருந்தாலும், அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்? என்று புழல் சிறை கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் சரமாரி கேள்வி :
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பாதுகாப்பு குறித்த வழக்கு விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது என்று நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். நீதிபதிகளின் வாதம் பின்வருமாறு
நீதிபதிகள் : தேசப் பாதுகாப்பான தொடர்பான விஷயத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. அலட்சியமாக செயல்பட்டுள்ளார்.
நீதிபதிகள் : ராமநாதபுரம் எஸ்.பி.யின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை.
நீதிபதிகள் : நீதிமன்ற உத்தரவின்படி வெளியுறவுதுறைக்கு கடிதம் அனுப்ப ராமநாதபுரம் எஸ்.பி, காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
நீதிபதிகள் : இந்தியாவிற்குள் யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாமா ?
நீதிபதிகள் : இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியமானது. இலங்கைக்கு தப்பிச் சென்ற இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார்களா ?
நீதிபதிகள் : உறுதியான தகவலுடன் பதில் மனு தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிடப்படுகிறது.
நீதிபதிகள் : ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராகி உத்தரவிட்டு வழக்கு அக்டோபர் 15ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.