சென்னை: ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி கோரி திமுக எம்.பி. தயாநிதிமாறன் ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர்; பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரயில்வே பொது மேலாளரிடம் கொடுத்துள்ளோம். காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் 9 பெட்டியாக இருக்க கூடியதை 12 பெட்டியாக மாற்ற வேண்டும்.
எஸ்கலேட்டர் வசதி, முதியோருக்கு பேட்டரி கார் வசதி செய்ய கோரிக்கை; வயதானவர்களுக்கு பேட்டரி கார் வசதியை இலவசமாக வழங்க வேண்டும். 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். புறநகர் ரயிலில் தானியங்கி கதவை அமைக்க வேண்டும். டிக்கெட் கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும். மேலும் பல இடங்களில் தமிழ் தெரியாத ஊழியர்கள் டிக்கெட் விநியோகம் செய்து வருகின்றனர். பொதுவாக அந்தந்த மாநிலத்தவரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம்.
ரயில்வே தனியார் மயமாக்கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்; ஏனென்றால் டிக்கெட் கட்டணம் விலை உயரும், வேலையிழப்பு ஏற்படும் ஆகிய காரணங்களை சுட்டி காட்டி பேசினார். மேலும் எழும்பூரில் நடைமேடைகளில் நகரும் படிக்கட்டை நவம்பர் மாதத்திற்குள் திறப்பதாக ரயில்வே துறை கூறியிருந்ததை வரவேற்றார்.