×

தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை மனு : அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்பதுரையில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் 203 தபால் வாக்குகளை எண்ணுமாறு உயர்நீதிமன்றம் இருநாட்களுக்கு முன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பபின்னணி


கடந்த 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என தீர்ப்பு

இதையடுத்து, இந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்  தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ராதாபுரம் தொகுதியில் 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு எந்திரங்களின் கண்ட்ரோல் யூனிட்டுகளையும், எண்ணப்படாத 203 தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்.இதற்காக 3 சுற்று வாக்கு எந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் வரும் 4ம் தேதி  11.30 மணிக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை நீதிபதியின் அனுமதியுடன் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஹாலை வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அவசர மனுவாக ஏற்க முடியாது


இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இன்பதுரையில் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தேர்தல் வழக்கு தானே, இந்த வழக்கை விசாரிக்க என்ன அவசரம் இருக்கிறது என்றும் தபால் வாக்குகளை எண்ணுவதில் என்ன பிரச்சனை உள்ளது என்ற கேள்விகளை முன்வைத்து அவசர வழக்காக இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார். இந்த வழக்கானது முறைப்படி பட்டியலிடப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , Supreme Court, Denial, Infatuation, Appeal, Radapuram, Postal Vote
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...