கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவிடாமல் அதன் உரிமையாளர் கதறி அழுதார். சிதம்பரம் மேலவீதி வீரபத்திரசாமி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். வீரபத்திரன் தெருவில் இயங்கி வரும் பத்மாவதி இன்டெர்பிரைஸஸ் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் 3.5 டன் பிளாஸ்டிக் பைகள் பதுக்கப்பட்டு இருப்பதை பார்த்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர்.
அப்போது அங்கிருந்த உரிமையாளர் ராம்நாத் அருகில் இருந்த இரும்பு கேட்டில் முட்டிக்கொண்டு கதறி அழுதார். அதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டு நெற்றி முழுவதும் ரத்தம் வழிந்தது. ஏற்கனவே ஒருமுறை ராம்நாத் குடோனில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்த அதிகாரிகள், அவரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரது செயலை கண்டுக்கொள்ளாமல் அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை எடுத்துச்சென்றனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 5.5 பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்துள்ளனர்.