நெய்வேலி: குறிஞ்சிப்பாடி அடுத்து ஆண்டார்முள்ளி பள்ளம் கிராமத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் கிளை நூலகம் கடந்த பல ஆண்டுகளாக விரிசல் விழுந்த நிலையில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து படித்து விட்டுச் செல்கின்றனர். மேலும் நூலகத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை படித்து வந்த நிலையில் இங்கு போதுமான இடவசதி இல்லாத காரணத்தாலும், கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதாலும் ஒரு வித அச்சத்துடன் புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களை கட்டிடத்திற்கு வெளியே நின்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பழைய கட்டிடத்திற்கு எதிரே நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளை நூலகத்தை புதிய கட்டிடத்தில் மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.