சென்னை: பைக் மாடலை மாற்றி தவறாக பதிவு செய்த வாகன பதிவுத்துறைக்கு (ஆர்டிஓவுக்கு) 20 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஓரி. இவர், கடந்த 2012ம் ஆண்டு அடையாறில் உள்ள பிரபல பைக் நிறுவனத்தின் பைக்கை முன்பதிவு செய்து வாங்கியுள்ளார். இந்நிலையில், பைக் நிறுவனத்தின் மேலாளர் இன்சூரன்ஸ் மற்றும் வாகன பதிவுக்கு கட்டணங்களை பெற்று, சென்னை மேற்கு ஆர்.டி.ஓ.வில் வாகனத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார். பின்னர் ஓரி, ஆர்.சி புக்கை வாங்கி பார்த்துள்ளார். அதில், பைக் பதிவு எண், பைக் எண் என்று எல்லாம் சரியாக இருந்துள்ளது. ஆனால் ஓரி வாங்கியுள்ள மாடல் பெயர் குறிப்பிடாமல், வேறு மாடல் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து பைக் வாங்கிய ஷோரூம் மேலாளரிடமும், பைக்கை பதிவு செய்த ஆர்.டி.ஓ.விடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளனர். இதனால், ஓரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
இந்நிலையில், சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஓரி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். அதில், “இதுபோன்று தவறாக பைக் பதிவு செய்துள்ளதால், இன்சூரன்ஸ் போன்ற விவகாரங்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதுகுறித்து பைக் நிறுவனமும், ஆர்டிஓவும் சற்றும் பொருட்படுத்தாமல் செயல்படுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு பெற்று தர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமாரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. பைக் நிறுவனம் தரப்பில் கூறுகையில், மாடல் பெயரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பைக் நிறுவனம், மேலாளர் மற்றும் பதிவு செய்த ஆர்டிஓ ஆகியோர் சேர்ந்து 20 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், தவறை சரி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.