தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு ஏராளமான பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பெட்ரோல் பங்க் அருகேயுள்ள அலுவலகத்தில் புகுந்து நின்றது.இதனால், பெட்ரோல் போட வந்தவர்கள், ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கார் மோதிய வேகத்தில் பெட்ரோல் பங்க் அலுவலகம் சேதமடைந்தது. இதில் கார் ஓட்டி வந்தவர் லேசான காயத்துடன் தப்பினார்.
இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்த முகமது சலீம் உசேன் (21) என்பதும், திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பெட்ரோல் பங்க்கில் கார் மோதியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இதுதொடர்பாக கல்லூரி மாணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.