ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து மைசூர் வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 1.35 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டது. மாலை 5.06 மணியளவில் ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் 5வது பெட்டியின் சக்கரத்தின் பிரேக் கட்டை அதிக அழுத்தம் காரணமாக சுற்றவில்லை. இதனால், அந்தச் சக்கரத்தில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு புகை வந்ததால் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் தற்காலிகமாக சக்கரத்தின் பழுதை சரிசெய்து 10 நிமிடத்திற்கு பிறகு ரயிலை இயக்கினர். ஓடும் ரயில் சக்கரத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.