சென்னை: சால்வை, மாலைகளுக்கு பதிலாக திமுகவினர் அளித்த புத்தகங்கள் இரவு பாடசாலை, நூலகத்துக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூற வருபவர்கள் பொன்னாடைகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்கள் குவிந்தன.சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் தங்கள் பகுதிகளுக்கு அந்த புத்தகங்களின் ஒரு பகுதியை வழங்கிடுமாறு ஏராளமான கோரிக்கைகள் வைக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வழங்கி வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதியில் உள்ள 110வது வட்டம், சென்னை-31, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு 7வது அவென்யூ, அப்பாசாமி தெருவில் உள்ள “அட்டன் இரவு பாடசாலை”யில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிடுமாறு தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் எம்.எல்.ஏ., ஆயிரம்விளக்கு மேற்கு பகுதிச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு மற்றும் வட்டச் செயலாளர் ஜெ.இருதயநாதன் ஆகியோர் திமுக தலைவருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், “அட்டன் இரவு பாடசாலை” நிர்வாகத்தினரிடம் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார்.அதுபோலவே, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கடம்பத்தூர் ஊராட்சி, வெண்மணம்பூதூர் அரசு நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிடுமாறு, திமுக தலைவருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், “வெண்மணம்பூதூர் கிராம அரசு நூலத்திற்கு” நிர்வாகத்தினரிடம் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார். ஆக மொத்தம் நேற்று மட்டும் 900க்கும் மேற்பட்ட புத்தகங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேத்துப்பட்டு மற்றும் திருவள்ளூர் கடம்பத்தூர் ஊராட்சி அரசு நூலகம் ஆகிய இரண்டு நூலகங்களுக்கு வழங்கினார்.இந்நிகழ்வின்போது மத்திய சென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமை நிலைய செயலாளர் கு.க.செல்வம் எம்எல்ஏ, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, 110வது வட்டச் செயலாளர் ஜெ.இருதயநாதன் மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி, வெண்மணம்பூதூர் நூலகர் தி.கணேசன் மற்றும் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் வெண்மணம் ம.கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
‘காந்தியடிகளின் எண்ணத்தை நாம் நினைவில் நிறுத்திட வேண்டும்’
இந்தியா குறித்த காந்தியடிகளின் எண்ணத்தை நாம் நினைவில் நிறுத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:இந்நாளில், என் சக இந்தியர்களோடு இணைந்து, ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களைப் போற்றுகிறேன். அகிம்சை, இரக்கத்தைப் கற்பித்த அண்ணல் காந்தியடிகள், கருத்து வேறுபாடு, துன்ப துயரங்களின் போது, மன உறுதியோடு அதனை எதிர் கொள்ள வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். முன்னெப்போதையும் விட, அண்ணலையும் - இந்தியா குறித்த அவர்களின் எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்திட வேண்டும். என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.