×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை விசாரணைக்கு பின் விடுவித்தது சிபிசிஐடி

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை சிபிசிஐடி விசாரணைக்கு பின் விடுவித்தது. கோவிந்தராஜிடம் தேனி அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முதல் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. கோவிந்தராஜை விடுவித்த சிபிசிஐடி போலீஸ் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீண், ராகுல் ஆகிய 3 பேரும், அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை டாக்டர் முகமது சபியை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். அவர் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இர்பான் மொரீசியஸ் தப்பி சென்று விட்டதாகவும், அவர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வருவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இர்பான் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி சிவா, அவரை வரும் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவன் இர்பான் மொரீசியசில் இருப்பதாகவும், அங்கிருந்து வரும்போது அவரை கைது செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் மொரீசியசிலிருந்து பெங்களூர் வந்து சேலம் வந்து சரண் அடைந்ததார். இதற்கிடையில், இர்பானின் தந்தை முகமது சபியிடம் நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில், வேதாச்சலம், முகமது ரஷீத் என்ற இரு புரோக்கர்களின் பெயர்களை தெரிவித்திருந்தார். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

முகமது சபியிடம் நேற்று இரண்டாவது நாளாக நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றும் கோவிந்தராஜ் என்ற புரோக்கரும் ஆள்மாறாட்ட மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த தகவல் வேலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவிந்தராஜை கைது செய்து நேற்று இரவு தேனிக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விடிய, விடிய துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊத்தங்கரையை சேர்ந்த புரோக்கர் வேதாச்சலத்திற்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து வேதாச்சலத்தை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

4 மணிநேரம் கிடுக்கிப்பிடி

தர்மபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடந்தது. அப்போது இந்த முறைகேட்டினை செப்.4ம் தேதியே கண்டறிந்து விட்டதாகவும், அது தெரிந்தவுடன், இர்பான் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தார். தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும், இர்பான் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தார் என்பதற்கான ஆதாரங்களையும் எஸ்பியிடம் ஒப்படைத்தார்.

இர்பான்  சஸ்பெண்ட்

நீட்  தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பாக தர்மபுரி மருத்துவக்கல்லூரி டீன்  சீனிவாசராஜ் மற்றும் துணை டீன் முருகன் ஆகியோர் தேனி சிபிசிஐடி போலீசாரிடம்  நேற்று விசாரணைக்கு ஆஜாராகினர். அப்போது, மாணவன் இர்பானின் சான்றிதழ்களை  சமர்பித்தனர். சான்றிதழ்களை ஆய்வு செய்த போலீசார் சீனிவாசராஜ் மற்றும் துணை  டீன் முருகனிடம் காலை 11 மணியில் இருந்து துவங்கி 2 மணிநேரம் வரை தீவிரமாக  விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை மருத்துவக்கல்வி இயக்குனருக்கு தகவல்  தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் மாணவன் இர்பான் கல்லூரியில் இருந்து  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தை டீன் சீனிவாசராஜ்  கையெழுத்துடன் இர்பான் வீட்டிற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : CBCID ,trial ,Govindaraj , NEET, CBCID
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...