சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர். குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் ரயில்நிலையம் அருகே புளியங்குடி செல்லும் சாலையில் தனியார் ரைஸ்மில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற டவுன் காவல் நிலைய முதல்நிலை காவலர் அந்தோணிராஜ், குழந்தையின் அழுகுரல் சத்தம்கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தவித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவலர் அந்தோணிராஜ், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள், குழந்தைக்கு முதலுதவி அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை வீசி சென்ற தாய் யார்? வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் வீசி சென்றாரா? அல்லது தவறான முறையில் குழந்தை பிறந்ததால் வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையை ரயில் நிலையம் அருகே வீசி சென்ற சம்பவம் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.