பொள்ளாச்சி: கோவை உக்கடத்திலிருந்து நேற்று முன்தினம் மாலையில் மதுரைநோக்கி புறப்பட்ட அரசு பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பழனியை சேர்ந்த டிரைவர் லட்சுமணன்(45) என்பவர் ஓட்டி சென்றார். கன்டக்டராக உடுமலையை சேர்ந்த சொக்கலிங்கம் இருந்துள்ளார். அந்த பஸ் பொள்ளாச்சியை கடந்து உடுமலை ரோட்டில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஊஞ்சவேலாம்பட்டி சந்திராபுரம் பிரிவு பகுதியில், ரோடு விரிவாக்க பணிக்காக வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதியது. பின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், டிரைவர் லட்சுமணன், கன்டக்டர் சொக்கலிங்கம், பயணிகள் மோகன்குமார்(47), ராஜேஸ்கண்ணா(29), ஐயனார்(71), பாஸ்கர்(25) ஆகியோர் படுகாயடைந்தனர். இதையறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, படுகாயமடைந்த பயணிகளை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேஷ் கண்ணா இறந்தார். இதில் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பஸ் கண்டக்டர் சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதையடுத்து கவனகுறைவாக பஸ்சை இயக்கியதாக டிரைவர் லட்சுமணன் மீதும். ரோடு விரிவாக்க பணி நடைபெற்றுகொண்டிருக்கும்போது ரிப்லெக்ட் ஸ்டிக்கர் ஒட்டாமலும், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தாமலும் இருந்ததாக சாலை பணி ஒப்பந்ததாரர் மற்றும் மேலாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் மீது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று, உடுமலைரோடு சந்திராபுரம் பிரிவு பகுதியில் விபத்து ஏற்பட்ட இடத்தை, டிஎஸ்பி.,சிவக்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் பலர் ஆய்வு செய்தனர்.