திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கடையின் பின்புறம் துளையிட்டு நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி உள்ளது. இந்த கட்டிடம் மூன்று மாடிகளை கொண்டுள்ளது. வழக்கம் போல் இன்று ஊழியர்கள் முன்பக்க கதவை திறந்து பார்த்த போது கீழ் தளத்தில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கதவை உடைக்காமல் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்று பார்த்த போது தான் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. கீழ்தளத்தில் இருந்த நகைகள் முழுவதுமாகவும், முதல் தளத்தில் சில இடங்களில் கொள்ளை நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு தற்போது கணக்கீடப்பட்டு வருகிறது.
திருச்சியில் இது போன்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவம் இதற்கு முன் நடந்தது இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருச்சியில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தங்கி இருப்பவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை நடந்த லலிதா ஜுவல்லரியில் திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.