×

தமிழ் தெரியாதவர்களை நீதிபதிகளாக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றி தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்  என்றும், நீதிபதிகளாக தேர்வு பெற்ற பின்பு பயிற்சிக்காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் தமிழக வழக்கறிஞர்கள் புறக்கணிப்பட்டு, தமிழ்  தெரியாத இதர மாநிலத்தவர்களும் பணியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணனாது.

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதிபரிபாலனத்தில் பல்வேறு  சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும். கீழமை நீதிமன்ற கட்டமைப்பை சிதைக்கும் விதமாகவும், நீதிபரிபாலன முறையில் மக்களை அந்நியப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட  விரும்புகிறோம். நீதிமன்ற நடவடிக்கைகளில் அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழியை முழுமையாக வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் குரலெழுப்பி  வருகின்றன. இந்த அறிவிப்பு தமிழை புறக்கணிக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. எனவே, இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாக திரும்பப் பெறவேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழை உள்ளடக்கிய தேர்வை நடத்த  வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : K Balakrishnan ,withdrawal ,Tamil ,judges ,Unknowns , Tamil , Repeal , judicial, notice, K Balakrishnan
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...