×

அண்ணா, கலைஞரின் நினைவை போற்றும் வகையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி தமிழைப் பெருமைப்படுத்துங்கள்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அண்ணா, கலைஞர் நினைவை போற்றும் வகையில் இந்தியாவின் ஆட்சிமொழியாக்கி தமிழை பெருமைப்படுத்துங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது, “உலகின் தொன்மையான  மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். ஐ.நா.அவையில் உரையாற்றும்போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன்  பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை. தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப்  பாராட்டுகிறோம். அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த சமஸ்கிருதத்தையும், ஆதிக்க மனப்பான்மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல்  தீவிரமாகச் செயல்பட்டது மத்திய பாஜக அரசு.

ஆசிரியர் தினத்தை “குரு உத்சவ்” என்று மாற்றுவது, சமஸ்கிருத வார்த்தைகளை எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம் - வங்கி உள்ளிட்ட துறைகளில் இந்தியை மட்டும் முன்னிலைப்படுத்துவது, - இப்படி  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக அரசு செயல்பட்டு வந்தது. அதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி தரத்தக்க பெரிய மாற்றமாக, “தமிழ் தான் உலகின் பழமையான மொழி” என்ற வரலாற்று உண்மையை இந்தியப் பிரதமர் ஏற்றுப் போற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும், கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய  அரசின் நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல், மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளை பாஜக அரசு நிறுத்திவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் மூலம், சங்ககாலத்  தமிழர்கள், அப்போதே உருவாக்கிய நகர நாகரீகத்தின் சிறப்புகள் வெளியாகியுள்ள சூழலில், தமிழின் பெருமை குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது, உலகத்தார் கவனத்தை ஈர்த்திருக்கிறது.தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய - இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடை யதும், உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதுமான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை  அளிக்க வேண்டிய பொறுப்பு, மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது.
8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த முயற்சியின் முதல்கட்டமாக, அந்த மொழிகளிலெல்லாம்  மூத்த மொழியான தமிழை, இந்தியாவின் ஆட்சிமொழியாக்க ஆக்கிட வேண்டும் என்றும், திமுக தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமரை  கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், அது பிறந்த இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகள் பலவற்றில், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள உண்மையை, பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் அவர்கள், “இட்லி, தோசை, வடை, சாம்பார் ஆகியவை சுவையாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள், விருந்தோம்பலுக்கு  மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்ட காலமாகவே பெயர் பெற்றவர்கள்.
எனவே பிரதமர் மோடி, இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் அவருக்கு  என்றென்றும் நன்றி பாராட்டுவார்கள். மேலும் தமிழ் மொழியை மத்தியில் ஆட்சிமொழி ஆக்குவது, பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவைப் போற்றும் அரிய செயலாகவும் அமையும்.“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறளை அறிந்துள்ள தமிழர்கள், பிரதமர் மோடி தமிழ் மொழி மீது காட்டும் இந்த ஆக்கபூர்வமான அக்கறையை, விரைவில் நடைமுறைச்  செயலாக்கத்திற்குக் கொண்டு வருவார் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.


Tags : Make Artist ,MK Stalin ,Anna ,India ,artist , Anna, commemorate , artist, India, MK Stalin, PM
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...