×

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சின்மயானந்தாவுக்கு சிகிச்சை முடிந்தது: சிறையில் அடைப்பு

ஷாஜகான்பூர்: சட்டக் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவுக்கு சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா (73) மீது சட்டக் கல்லூரி மாணவி (23) ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறினார். இது குறித்து விசாரிக்க, உச்ச  நீதிமன்ற உத்தரவுப்படி  சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, சின்மயானந்தாவை சமீபத்தில்  கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனிடையே, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 23ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் அவர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனது கண்களில் பாதிப்பு இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து, கிங் ஜார்ஜ்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து, வரும் 16ம் தேதி  பரிசோதனைக்கு வரும்படி கூறினர். இதனை தொடர்ந்து, நள்ளிரவு 2.30 மணியளவில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் கூறுகையில், “சின்மயானந்தா சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக உள்ளது. காலை உணவை அவர் எடுத்துக் கொண்டார்,” என்றார்.


Tags : Arrested , case , rape ,Chinmayananda,incarceration
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்