பனாஜி: தசரா, தீபாவளியை முன்னிட்டு அடுத்த 3 மாதங்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாலை வரியை 50 சதவீதம் குறைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது.ஆட்டோ மொபைல்துறை சரிவை சந்தித்துள்ளதால் இந்த துறையில் பணியாற்றிய பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதை சரிகட்டும் விதமாக, கோவா அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அடுத்த 3 மாதங்களுக்கு வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு சாலை வரியை 50 சதவீதமாக குறைக்க அது முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநில சாலை போக்குவரத்து துறை அமைச்சர் மாவில் கோடி ங்ஹோ கூறுகையில், ‘‘தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்குவதையொட்டி புதிய வாகனங்கள் வாங்கும் மக்களுக்கு சாலை வரியை 50 சதவீதமாக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், சரிவை சந்தித்துள்ள ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியை நோக்கி நடைபோடும். இந்த மாதம் முதல் 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும். நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களில் புதிய வாகனங்கள் பதிவு 15 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை சரிந்துள்ளது,’’ என்றார்.