ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளை பெற்று சிலர் முறைகேடு செய்தனர். இதுதொடர்பாக மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், கண்ணன், வீரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில், கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை சிறையிலும், ரூபேஷ் திருச்சூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக ஈரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு 3 பேரும் நேற்று அழைத்து வரப்பட்டனர். அவர்களை நீதிபதி உமாமகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் வரும் 15ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.முன்னதாக, கோர்ட் வளாகம் வந்ததும் கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என கோஷமிட்டபடி சென்றனர்.