×

குரூப் 2 பாடத்திட்டத்தில் தமிழ் நீக்கப்பட்டதை கண்டித்து போட்டி தேர்வெழுதும் மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை: குரூப் 2 பாடத்திட்டத்தில் தமிழ்பாடத்திட்டத்தை நீக்கியதை கண்டித்து மதுரையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் டிகிரி படிப்பை தகுதியாக கொண்ட குரூப் 2 தேர்வில் முதன்மை மற்றும் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. முதன்மை தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இதில் 100 கேள்விகள் தமிழ்பாடத்திலிருந்தும், 75 கேள்விகள் பொது அறிவிலிருந்தும், 25 கேள்விகள் கணிதத்தில் இருந்தும் கேட்கப்படும். இது நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்பாடத்திட்டத்தை நீக்கி,  தேர்வு முறையை மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், இனிமேல் குரூப்-2 தேர்வில், தமிழ் பாடப்பிரிவிலிருந்து கேட்கப்படும் 100 கேள்விகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 175 கேள்விகள் பொதுஅறிவிலிருந்தும், 25 கேள்விகள் கணிதத்திலிருந்து கேட்கும் வகையிலும்.  பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்பாடத்திட்டத்தை நீக்கியதை கண்டித்து, மதுரையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் 400 பேர் நேற்று மதுரை மாநகராட்சி வளாகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தனர். இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜிடம் கோரிக்கை மனு கொடுப்பதாக கூறி, சிலர் அவரைச் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து மதுரை மாணவி சுதா கூறும்போது, ‘‘கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் அதிகமானவர்கள் தமிழ் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறுவார்கள். குரூப்-2 முதன்மைத்  தேர்வில் 100 கேள்வி தமிழ் தொடர்பாக இருக்கும் போது அவர்கள் எளிதாக தேர்ச்சி பெற முடியும். ஆனால், இதனை டிஎன்பிஎஸ்சி முற்றிலும் நீக்கிவிட்டு, பொது அறிவு பகுதியில் 175 கேள்வியை கேட்டு, அதன்மூலம், வெளிமாநிலத்தவர்கள், தமிழக அரசுப் பணியில் சேர வழிவகுத்துள்ளது. தமிழக போட்டியாளர்கள் அரசுப்பணியில் சேரக்கூடாது என திட்டமிட்டு டிஎன்பிஎஸ்சி தமிழ்பாடத்திட்டத்தை நீக்கியுள்ளது. தமிழகத்தில் தமிழக அரசுப்பணியில் தமிழர்கள் சேரக்கூடாது என திட்டமிட்டு தமிழ்மொழிபாடத்திட்டத்தை நீக்கியுள்ளனர். மீண்டும் அதனை சேர்க்க வேண்டும்’’ என்றார்.

Tags : exam students ,Tamil ,Collector ,Group 2 syllabus Group 2 ,Office , Group 2, Students, Collector, Office
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்