ஒடிசா: தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோனியா நிறுவனம் இணைந்து உருவாக்கியது ஆகும். பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து இப்பெயர் உருவாக்கப்பட்டது. உலகின் அதிவேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை ஏறக்குறைய 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடிய தன்மை உடையது.
290 கிமீ தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் நேற்று ஒடிசாவில் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சண்டிபூர் ஆய்வு மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது. பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த டிஆர்டிஓ, பலாசோர் ஒருங்கிணைந்த ஆய்வு மையத்துக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.