திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் 11,158 கிராம செயலகம், 110 நகராட்சிகளில் 3809 வார்டு செயலகம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கிராம செயலகத்தில் பணிபுரிய 95 ஆயிரத்து 88 ஆயிரம் பேரும், வார்டு செயலகத்தில் பணிபுரிவதற்கு 33 ஆயிரத்து 809 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யுபிஎஸ்சி தேர்வை காட்டிலும் இந்த கிராம மற்றும் வார்டு செயலகத்தில் பணிபுரிவதற்காக 22 லட்சத்து 69 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பம் பரிசீலனைக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 164 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று நடந்த விழாவில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் 20 லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு அரசாணை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அனைவரும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ரேஷன் கார்டு, பென்ஷன், வீட்டுமனை போன்ற 500க்கும் மேற்பட்ட சேவைகளை 72 மணி நேரத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் விதமாக செயல்பட வேண்டும். 45 நாட்களில் அனைத்து கிராம செயலகத்திலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். கிராம தன்னார்வலர்கள் அனைவருக்கும் டிசம்பர் 1ம் தேதி ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் செயலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். நாளை காந்தி ஜெயந்தி முதல் மாநிலம் முழுவதும் கிராம மற்றும் வார்டு செயலகம் செயல்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளமும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளமும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.