சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் வரை நாங்குநேரியில் போட்டியிட 12 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட 6 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு செய்ய கடைசி நாளான நேற்று திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் நா.புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வனும் வேட்புமனுதாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் நேற்று வரை 28 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், அதிமுக சார்பில் நாராயணனும் மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து நாங்குநேரி தொகுதியில் 38 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்துள்ளதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் வாங்க வரும் 3ம் தேதி மாலை 3 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். இதையடுத்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 9ம் தேதி முதல் இரண்டு தொகுதியிலும் தலா 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பிரசாரம் செய்கிறார்கள்.