சென்னை: செங்குன்றம் அருகே ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய அரசியல் பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (எ) துப்பாக்கி ராமநாதன் (55). இவர், அகில பாரத இந்து மகாசபாவின் தலைவராகவும், தமிழக துணை தலைவராகவும் இருந்து வருகிறார். இவர், மொண்டியம்மன் நகரில் டிஎன்டி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே சொந்த வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வீடு கட்டும் பகுதியில் மணல் கொட்டி வைத்திருந்தார்.இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் வெற்றிவேல் (30) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கொட்டி வைத்திருந்த மணலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
இதை பார்த்து ஆவேசமடைந்த ராமநாதன், ஏன் என்னுடைய இடத்தில் கொட்டி வைத்துள்ள மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன், தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். பின்னர் அவர் தரையை நோக்கி 3 முறை சுட்டார். இதனால் ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது நண்பர்கள் அலறியடித்து தப்பி ஓடினர்.இதுகுறித்து செங்குன்றம் போலீசில் வெற்றிவேல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை ராமநாதனை கைது செய்தனர். அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் இருக்கிறதா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி ராமநாதன், மொண்டியம்மன் நகர் பஜார் பகுதி வழியாக காரில் சென்றபோது, முன்னே சென்ற கார் வழி விடவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த ராமநாதன் அந்த காரை முன்னே சென்று வழிமறித்து, தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.