பண்ருட்டி: பண்ருட்டி காந்திரோட்டில் ஹஜ்ரத் நூர்முகமது ஷா அவுலியா தர்கா உள்ளது. 100 ஆண்டிற்கு மேல் பழமை வாய்ந்த இந்த தர்காவில் கந்தூரி உருஸ் பண்டிகை திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய பண்டிகையான சந்தனகூடு திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு அவுலியாவின் ரவுலா ஷெரீப் பீடத்தை பூவணி போர்வையால் அலங்கரித்து மேல் ரவுலா ஷெரீப்பிற்கு சந்தனம் அணிவித்து சந்தன கலசம் கூண்டில் ஏற்றப்பட்டு பேண்டு வாத்தியங்கள் மற்றும் சகல மேள வாத்தியங்களுடன் வாண வேடிக்கையோடு சந்தனகூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தது.
நேற்று விளக்கு பண்டிகை நடத்தப்பட்டு, தர்காவில் எல்லா கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. சந்தனகூடு திருவிழவை காண பண்ருட்டி, கடலூர், புதுப்பேட்டை, காடாம்புலியூர், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரம் மற்றும் கிராமங்களில் இருந்து அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் தாஜுதீன் தலைமையில் செயலாளர் ஷேக்அப்துல்லா, பொருளாளர் ஷேக்பாஸீத், நிர்வாக குழு உறுப்பினர்கள் சவுகத்அலி, முகமது இப்ராகீம் உள்பட பலர் செய்திருந்தனர். டிஎஸ்பி நாகராசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.