×

இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது: விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 23 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால். திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 23ம் தேதி முதல் நாளை (30ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடந்த 5 நாட்களில் மொத்தம் 18 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, நாங்குநேரியில் போட்டியிட 12 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட 6 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை நாள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று (30ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி, காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் ஆகியோர் பிற்பகல் 1 மணிக்கு மனுத்தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்கள் விக்கிரவாண்டிதொகுதியில் முத்தமிழ்  செல்வன், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 23 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று மட்டும் 15 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, நாளை (அக்.1ம்தேதி) வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் வாங்க அக்டோபர் 3ம் தேதி மாலை 3 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Tags : By-Election ,election , By-election, election block, filing nominations
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...