×

தொடர் மழை, பூச்சி தாக்குதலால் செடிகளிலேயே அழுகி வரும் கத்தரிக்காய்

தா.பழூர்: தொடர் மழை, பூச்சி தாக்குதலால் தா.பழூர் பகுதியில் செடிகளிலேயே கத்திக்காய்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்தரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கத்தரி சாகுபடி தற்போது காய்த்து குலுங்கும் தருணத்தில் உள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் கத்தரியில் பூச்சி தாக்கமும். மழையால் கத்திரிகள் செடியிலேயே அழுகி வெம்பி போயும் விடுகின்றன. இதனால் நல்ல விலைக்கு போகக்கூடிய கத்தரிக்காய்களை மூட்டை மூட்டையாக தைலமர காடுகளிலும், சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து அணைக்குடத்தை சேர்ந்த விவசாயி ஆசைமணி கூறுகையில், கத்தரி சாகுபடியில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தேன். அதிகப்படியான லாபம் இருப்பதால் தொடர்ந்து அதையே சாகுபடி செய்தேன். சென்றாண்டு கத்தரி விலை குறைவாக இருந்தாலும் இந்தாண்டு கத்தரி விலை அதிகமாக இருந்ததால் அதை விவசாயம் செய்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழையால் கத்திரி செடிகளில் உள்ள காய்கள் அப்படியே அழுகி விடுகிறது. தற்போது நாளொன்றுக்கு மூன்று மூட்டை கத்தரி பறித்தால் அதில் இரண்டு முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை தூக்கி வீச வேண்டிய நிலை உள்ளது. இந்தாண்டு சாகுபடியை மனவருத்தத்துடன் செய்து வருகிறேன். தற்போது கத்தரி விலை மிகவும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ரூ.35 வரை விற்பனையான கத்தரி தற்போது சந்தைகளில் 20 ரூபாய்க்கு குறைவாக எடுப்பது வேதனையாக உள்ளது. சொந்த நிலத்தில் சாகுபடி செய்தாலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர் செய்ய வேண்டியுள்ளது. தண்ணீருக்கு ஒரு மணி நேரத்திற்கு 80 ரூபாய் கொடுத்து விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் இதில் ஆள் செலவு, உரச்செலவு ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது லாபம் இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டியியுள்ளது. அழுகி வீணாகி வரும் பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். காய்கறிகளுக்கு சந்தையில் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

Tags : plants ,insect attacks , rain, pruning
× RELATED பீட்ரூட் கீரை மசியல்