×

ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட போக்குவரத்து கழக 5 மண்டல அலுவலகங்கள் திடீர் மூடல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நிர்வாக வாசதிக்காக கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், விழுப்புரம், சென்னை மாநகரம், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் என 9 கோட்டங்களாக பிரிக்கப்பட்டது. இந்த கோட்டங்களில் இருந்து 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் வாகன வசதிகள் செய்யப்பட்டது. இந்நிலையில் நீண்ட தூரங்களில் உள்ள மாவட்டங்களை கணக்கில் எடுத்து கொண்டு கூடுதலாக மண்டல அலுவலகங்கள் பிரிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். சுமார் 15 ஆண்டு கால கோரிக்கைக்கு பின்னர் நாகை, ஊட்டி, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மண்டலங்கள் நிர்வாக வசதிக்காக கடந்த 2013ம் ஆண்டு ஜீன் மாதம் 20ம் தேதி 110 விதியின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. நாகை மண்டல அலுவலகம் அப்போதைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பேசி கடுமையான முயற்சியால் அமையப்பெற்றது. நாகை மண்டல அலுவலகத்தின் கீழ் சிதம்பரம், சீர்காழி, மன்னார்குடி, மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகை, வேதாரண்யம், நாகை, திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி என 11 டெப்போக்கள் உள்ளது. நாகை மண்டல அலுவலகத்தின் கீழ் 541 புற நகர் மற்றும் நகர பஸ்கள் இயங்குகிறது. இந்த பஸ்கள் பெரும்பாலும் மதுரை, சென்னை என்று நீண்ட தூரங்களுக்கு பயணிகளை அழைத்து செல்லும் பஸ்களாகவே உள்ளது. மாவட்டத்தின் கடை கோடியில் இப்படி ஒரு மண்டல அலுவலகம் ஏற்படுத்தப்பட்டதால் பயணிகள் மற்றும் இன்றி தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் நிர்வாக வசதிக்காக நாகை மண்டல அலுவலகம் உள்ளிட்ட 5 மண்டல அலுவலகங்களை ஏற்கனவே இருந்த மண்டல அலுவலகங்களுடன் இணைக்க அரசு முடிவு எடுத்திருப்பது தொழிலாளர்கள் இடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் சிலர் கூறும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கும்பகோணம் மண்டலத்தில் இருந்து நாகை மண்டலம், கோவை மண்டலத்தில் இருந்து ஊட்டி, திருப்பூர், திருநெல்வேலி மண்டலத்தில் இருந்து தூத்துக்குடி என மண்டல அலுவலகங்களை 110 விதியின் கீழ் உருவாக்கினார். இதனால் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை தீர்த்து கொள்ள நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவல நிலை நீக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நாகை, ஊட்டி, தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மண்டல அலுவலகங்கள் மீண்டும் பழைய மண்டல அலுவலங்களுடன் இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் பழைய மண்டல அலுவலகங்களுடன் இணைத்தால் நீண்ட தூரம் சென்று பணியாளர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற தெரிவிக்க வேண்டிய அவலம் உள்ளது. குறிப்பாக நாகை மண்டல அலுவலகத்தின் கீழ் 11 டெப்போக்கள் உள்ளது. இந்த டெப்போவின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள் நீண்ட தூரமான கும்பகோணம் டெப்போவிற்கு சென்று தங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் டெப்போவில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது குறையை தெரிவிக்க நாகை மண்டல அலுவலகத்திற்கு எளிதாக வந்து செல்ல முடிகிறது.

திடீரென நாகை மண்டல அலுவலகத்தை மூடி குடந்தை மண்டல அலுவலகத்துடன் இணைத்தால் வேதாரண்யத்தில் இருந்து கும்பகோணம் செல்ல குறைந்தது 3 மணி நேரம் ஆகும். குடந்தை மண்டல அலுவலக அதிகாரிகளை சந்திப்பது என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. இப்படி தொழிலாளர்கள் பார்க்க முடியாத மண்டல அலுவலகம் நீண்ட தூரத்தில் இருப்பதை விட அருகில் உள்ள நாகையில் இருப்பது எளிதாக உள்ளது. எனவே நாகை மண்டல அலுவலகம் மற்றும் இன்றி மற்ற மண்டல அலுவலகங்களை மூடும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : closure ,zone offices ,Transport Zone 5 ,Jayalalithaa Jayalalithaa , Jayalalithaa, Government Transport
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...