×

ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.

ஃபரூக் அப்துல்லா எங்கே ?

கடந்த மாதம் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதனால் பிரச்னை எழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் 3 முறை முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா, டெலிபோன் வசதி இல்லாத இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. அதேசமயம் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும், வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு


இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் நடைபெற்ற அண்ணா மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும், எனக் கோரி எம்.பி. ஆன வைகோ மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, காஷ்மீரில் ஜனநாயகம் என்பதே இல்லாத நிலை உள்ளதாக குற்றசாட்டிய வைகோ தரப்பு வழக்கறிஞர், ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி செப்டம்பர் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

இந்நிலையில் பரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. தேவைப்பட்டால் ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுக வைகோவுக்கு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டப்படி கைதான ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. 


Tags : Farooq Abdullah ,Supreme Court ,Vaiko , Farooq Abdullah, Vaiko, Appeal, Petition, Discount, Supreme Court
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...