×

வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சேவை மையம் துவக்கம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவை புரிவதற்காக பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் குடும்பம், சமுதாயம், பணிபுரியும் இடம் மற்றும் பொது இடம் என எங்கு பாதிக்கப்பட்டு இறந்தாலும் இந்த சேவை மையத்தை அணுகலாம். உடல், பாலியியல், உணர்ச்சி, உளவியல் ரீதியாகவோ மற்றும் பொருளாதார ரீதியாகவோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாகுபாடின்றி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களும், 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அனைவரும் இம்மையத்தின் சேவையை பெற முடியும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை தேசிய நலப்பணி மூலமாக காவல்துைற மூலம் மீட்டெடுத்து தேவையான மருத்துவ உதவிகளை அளித்து அருகில் உள்ள அரசு அல்லது தனியார் இல்லங்களில் தங்க வைக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் குறுகிய மற்றும் நீண்டகால தங்கும் வசதி கொண்ட இல்லங்களில் தங்குவதற்கு இம்மையம் உதவி புரியும்.

தேவைப்பட்டால் முதல் தகவல் அறிக்கை, அறியப்படாத அறிக்கை முதலிய உதவிகள் செய்து தரப்படும். தேசிய, மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தேவையான சட்ட உதவிகளையும் பெற முடியும். நீலகிரி மாவட்டத்தில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9943040474, 0423-2443392 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : Service Center ,Victims of Violence Service Center ,Ooty , Service Center, Ooty
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...