×

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் காவிரி குடிநீர்

பரமக்குடி: பரமக்குடி நகர் பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதத்தால், 5 இடங்களில் வீணாகி வருகிறது. இதனை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். ரூ.650 கோடி செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் வரும் வழிகளில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கும் குடிநீர் வரபிரசாதமாக இருந்தது. தொடக்க காலங்களில் பராமரிப்பு செய்வதற்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதற்கான செலவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், அவர்களுக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் எந்த பணிகளும் நடைபெற வில்லை. பரமக்குடி நகர் பகுதிகளில் கண்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்து மாதக் கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பரமக்குடி புறநகர் பகுதிகளிலும், முதுகுளத்தூர் சாலைகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்து சாலை,வயல்கள் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் வீணாகி வந்து. இதுபற்றி தினகரன் நாளிதழில் செய்தியாக வெளியிட்டதின் எதிரொலியாக, இயந்திரங்களின் உதவியுடன் சரி செய்யப்பட்டது. ஆனாலும், சரி செய்த இரண்டு நாட்களில் மீண்டும் முதுகுளத்தூர் சாலைகளில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக, பரமக்குடி மஞ்சள்பட்டினம், ஓட்டபாலம், பொன்னையாபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சேதமடைந்த குழாய்களில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலைகளில் ஓடுகிறது. சாலையில் தேங்கும் தண்ணீர் சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் உருவாகி வருகிறது. மேலும், இந்த சாலையின் எதிரில் குடியிருப்பு மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சேதடைந்த குழாய்களை சரி செய்து, வீணாகி வரும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து ஓட்டபாலம் சாத்தையா கூறுகையில், ஒருவாரமாக ஓட்டபாலம் பகுதியில் இரண்டு இடங்களில் குழாய் உடைத்து தண்ணீர் வீணாகி வருகிறது. தண்ணீர் இல்லாமல் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் இரவு முழுவதும் வைகை ஆற்றில் காத்திருக்கின்றனர். சாலையில் வீணாகி வரும் தண்ணீரை பார்க்கும் போது வேதணையாக உள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் செல்லும் போது அருகில் உள்ள கடைகளில் தண்ணீரை வாரி இறைத்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்தின் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பொறியாளரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பராமரிப்பு செலவு ஒதுக்கீடு இல்லாததால் வேலை செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதுபோல் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

ஒரு கி.மீ பயணம்

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் ஈ.சி.ஆர் சாலையிலிருந்து திருப்புல்லாணிக்கு செல்லும் வழியில் காட்டு நாயக்கர் குடியிருப்பு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது, இந்நிலையில் காவிரி  கூட்டு குடிநீர் பைப்பு மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உடைந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அதை ச ரிசெய்யாததால் இப்பகுதி மக்கள் குடிதண்ணீருக்காக வண்டியில் குடங்களை வைத்து கொண்டு 1 கி.மீ தூரம் உள்ள ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பைப்புகளில் எடுத்து வருகின்றனர். ஒரு சிலர் சாலையின் ஓரங்களில் கீழக்கரைக்கு குடிதண்ணீர் செல்லும் பைப்புகளில் கசிந்து வரும் தண்ணீரை மணி கணக்கில் காத்திருந்து எடுத்து செல்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரெத்தினகுமார் கூறுகையில், ‘‘இப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் குழாய் உடைந்து இரண்டு வருடங்களாக ஆகிவிட்டது. இதை சரி செய்து தரும்படி பலமுறை இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தும், நேரடியாக கேட்டும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடன் உடைந்த குடிதண்ணீர் குழயை சரி செய்து தினமும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

தொட்டிகள் சேதம்

முதுகுளத்தூரிலிருந்து கடலாடி வழியாக செல்லும் வழியில் உள்ள குழாய் ஏர்வால்வு தொட்டிகளில் குழாய் வெளியே தெரியும்படி செல்கிறது. முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையம் எதிர்புறம், முதுகுளத்தூர் மறவர் தெரு வழியாக கடலாடி ரோடு போன்ற இடங்களில் ஏர்வால்வு குழாய் உள்ள தொட்டியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர், இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. இதனை பயன்படுத்தி டிராக்டர்களில் தண்ணீர் பிடிப்பதற்கும், கரிமூட்டம் மற்றும் கட்டிடம் கட்டும் பணிக்காக அள்ளி வருகின்றனர். மற்ற நேரங்களில் தண்ணீர் வீணாகி வழிந்தோடி வருகிறது. இதனால் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் போய் சேராததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து குடிநீர்வடிகால் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள புகார் கூறுகின்றனர். எனவே சேதப்படுத்தப்பட்டுள்ள குழாய், ஏர்வால்வு தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cauvery , Cauvery, drinking water
× RELATED காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூடுகிறது