×

நாங்குநேரியில் போட்டியிட பாஜ முடிவா? அதிமுக கூட்டணியில் கடும் மோதல்: பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

நாங்குநேரி: நாங்குநேரியில் பாஜவின் முக்கிய நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் கடும் மோதல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து அதிமுக, பாஜ இரு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து இரு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. நாங்குநேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜ நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அதிமுக தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. பாஜ மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜ ஆதரவை அதிமுக கேட்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து இதுவரை எந்த நிலைப்பாடும் நாங்கள் எடுக்கவில்லை என்றார். இந்தநிலையில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அளித்த பேட்டியில், இடைத்தேர்தல் குறித்து முதல்வர் கூறிய கருத்தை நாங்கள் கேட்டோம். பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு கூடி முக்கிய முடிவுகளை நாளை (இன்று) காலைக்குள் அறிவிக்கும் என்று கூறினார்.

இதற்கிடையே நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக பாஜ நெல்லை மாவட்டத் தலைவர் தயாசங்கர் மற்றும் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பெயர்களில் வேட்பு மனு விண்ணப்பம் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் வேட்பு மனு செய்திட கடைசி நாளான இன்று பாஜ சார்பில் மனுதாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். பாஜவின் இந்த திடீர் நடவடிக்கையால் அதிமுக கூட்டணியில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்கிறார் ஓபிஎஸ்
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எனது பிரசார சுற்றுப்பயணம் தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார். நீட் தேர்வு தேவை இல்லை என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. தொடர்ந்து அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இடைத்தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி தொடரும். அமைச்சர் பாண்டியராஜன் கீழடி ஆய்வை தொடர்ந்து பார்வையிட்டு கண்காணித்து வருகிறார். கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.  


Tags : Baja ,Nankuneri ,Bonn Radhakrishnan ,conflict ,AIADMK ,Will Baja ,CP Radhakrishnan Interview ,CP Radhakrishnan ,alliance , Baja , contest, Nankuneri?, AIADMK ,alliance,Radhakrishnan, CP Radhakrishnan
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...