வேலூர்: தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும், நிதி செலவினங்களும் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. குறிப்பாக மத்திய அரசின் நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், நபார்டு திட்டம், தாய் திட்டம் உள்ளிட்டவை கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில், உள்ளாட்சித்துறையில் காகிதப்பயன்பாட்டுக்கு மொத்தமாக விடை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதில் ஒன்றாக ஊராட்சி செலவினங்கள் மேற்கொள்வதில் பிஎப்எம்எஸ் என்ற நிதி மேலாண்மை திட்டத்தை (ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை) மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை முதல் ஊராட்சிகளில் காசோலை பயன்பாட்டுக்கு விடை கொடுக்கப்படுகிறது. காசோலைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கணக்கு வழக்குகளையும் 30.09.2019ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து நாளை முதல் ஊராட்சி கணக்கு எம்.2ஐ தவிர அனைத்து கணக்குகளும் பிஎப்எம்எஸ் என்ற நிதி மேலாண்மை திட்டத்தின் கீழ் (ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை) மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக அனைத்து கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.