கோவை: தமிழகத்தில் இந்தாண்டு சராசரி அளவு வடகிழக்குப் பருவமழை பெய்யும் என கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்திற்கான முன் அறிவிப்பு ஆய்வுகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யின் பயிர் மேலாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை கொண்டு ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட கணினி கட்டமைப்பு மூலம் முன்னறிவிப்பு பெறப்பட்டது. இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவாக 60%வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.