×

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் வரும் தண்ணீரை திருடி பயன்படுத்தும் ஆந்திர விவசாயிகள்

* சென்னைக்கு வரத்து குறையும் ஆபத்து * அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க கொண்டு வரப்படும் தண்ணீரை ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் விவசாயத்திற்காக, ஆந்திர விவசாயிகள் திருடுகின்றனர். இதனால் நீர்வரத்து குறையும்  ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேநிலை நீடித்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து போனது குறிப்பிடதக்கது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8  டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல்  வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு,  முதல் தவணை காலத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என  தமிழக அரசு,  ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு இல்லாததால் ஆந்திர அரசால் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை  ஏற்பட்டது. பின்னர் மழை பெய்ததால் கண்டலேறுவில் போதிய அளவு தண்ணீர் இருப்பு காணப்பட்டது.

இதனால், ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம் தேதி  500 கன அடியும், பின்னர் 1000 கன அடியாகவும் மேலும், 2000 கன அடி என  கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு செப்டம்பர் 28ம் தேதி வந்தடைந்தது. ஆரம்பத்தில் 50 கன அடியாகவும் பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று பிற்பகல் 750  கன அடிக்கு மேல் தமிழகத்திற்கு  தண்ணீர்  வரத்து அதிகரித்து  வந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே  ஆந்திர பகுதியான கண்டிகை, ஆம்பாக்கம்,  சிறுவனம்புதூர், மதனம்பேடு,  மதனஞ்சேரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு   தண்ணீரை உறிஞ்சி நாற்று நடவும், பயிர்களுக்கு தண்ணீர் பாயிச்சவும் பயன்படுத்துகிறார்கள். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தகூடாது என அதிகாரிகள் தெரிவித்தும், ஆந்திர விவசாயிகள் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைவாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.  எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Andhra Pradesh ,Krishna Canal ,Uthukottai ,Krishna , Uthukottai, Andhra ,farmers ,water , Krishna canal
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி