ரியாத்: கடுமையான இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் நாடு சவுதி அரேபியா. இங்கு குற்றச் செயல்களுக்கும், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்கும் அளிக்கப்படும் கடுமையான தண்டனைகளுக்கு பயந்தே, வௌிநாட்டினர் பெரும்பாலும் இந்நாட்டுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். அதேபோல், இந்நாட்டு பெண்களும், ஆண்களும் இஸ்லாமிய சட்டப்படியே வாழ வேண்டும். ஆனால், இந்நாட்டின் இளவரசராக முகமது பின் சல்மான பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் முழுநீள கருப்பு உடை அணிவது, சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவது, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தினார். இதனால், சவுதி அரேபியாவில் தற்போது ஆடம்பர உடையணிந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சல்மானின் இதுபோன்ற சீர்த்திருத்தங்களுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், 49 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு மக்களுக்கு சுற்றுலா விசா வழங்கும் அறிவிப்பை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார். இந்நாடு எண்ணெய் வளமிக்கது. இதன் வருமானத்தை சார்ந்தே இந்நாடு உள்ளது. எதிர்காலத்தில் எண்ணெய் வளம் குறைந்தால் ஏற்படக் கூடிய வருவாய் இழப்பை சரிக்கட்டுவது தொடர்பாக யோசித்த சல்மான், சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தால், தனது நாட்டின் கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும் சீர்குலையும் அபாயமும் உள்ளதை உணர்ந்து, 19 விதமான கட்டுப்பாடுகளை நேற்று சவுதி அரசு அறிவித்தது. இதன்படி, சவுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு ஆண், பெண் சுற்றுலா பயணிகள், இறுக்கமான உடைகள், ஆபாச வார்த்தைகள் பொறித்த உடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் மது குடிப்பது, அநாகரீகமாக நடந்து கொள்வது, முத்தங்கள் கொடுப்பது ஆகியவையும் குற்றமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரயில் நிலையத்தில் தீ விபத்து
சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள ஹராமைன் அதிவேக ரயில் நிலையத்தில் நேற்று மாலைய பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்திற்கு கரும்புகை கிளம்பியதால், சுற்றுப்புற பகுதியினர் பீதி அடைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.