பெங்களூரு: வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழாவை கன்னட எழுத்தாளர் பைரப்பா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார். முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். மைசூரு தசரா விழா, ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தசராவை மூத்த இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா நேற்று காலை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வதன் மூலமாக தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ‘‘தசரா என்றால் கெட்ட செயல்களை தவிர்த்து விட்டு நல்ல செயல்களை தொடங்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.
இந்நாளில், மாநில மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டும், அவர்களின் வாழ்க்கை வளமாக அமைய வேண்டும் என்று அம்மனிடம் வேண்டினேன். மைசூரு தசரா, இன்று நேற்றல்ல நீண்ட காலமாக நடைபெறுகிறது. தனிச்சிறப்புடன் நடைபெறும் இவ்விழாவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசின் சார்பிலும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது,’’ என்றார். தசராவை முன்னிட்டு மைசூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மைசூருவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.