மணிலா: பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ‘நெருப்பு வளையம்’ எனப்படும் மிக ஆபத்தான பகுதியில் இந்த நாடு அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானா தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.02 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. மிண்டானோ தீவில் 76.1 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்வை உணர்ந்த மக்கள் பலரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.