கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த நாரதா ஊழல் வழக்கில் இம்மாநில பாஜ மூத்த தலைவர் முகுல் ராய், விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். மேற்கு வங்கத்தில் இணையதள செய்தி நிறுவனம் தொடங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதை நாரதா இணையதள செய்தி ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்டார். இது தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக, சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜராகும்படி இம்மாநில பாஜ மூத்த தலைவர் முகுல் ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று அவர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.