சென்னை : மாநில அளவிலான வாலிபால் போட்டியில், ராணி மேரி பெண்கள் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை ஐஐடி வளாகத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதன் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ராணி மேரி கல்லூரி, 3-0 என்ற செட்களில் கிண்டி செல்லம்மாள் கல்லூரியையும், அடுத்து சென்னை ஐஐடி அணியை 3-0 என்ற செட்களிலும், நுங்கம்பாக்கம் பெண்கள் கிறித்துவ கல்லூரியை 3-1 என்ற செட்களிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பரபரப்பான பைனலில், ஆவடி நாசரத் கல்லூரியை 2-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பட்டம் வென்ற ராணி மேரி வாலிபால் அணி வீராங்கனைகளையும், உடற்கல்வி இயக்குநர் சுஜிதா, பயிற்சியாளர்கள் வசந்த குமாரி, மெர்லின் சுகந்தமலர், ராமகிருஷ்ணன் ஆகியோரை கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தி பாராட்டினார்.
பல்கலை. வாலிபால்: சென்னை பல்கலைக்கழக ஏ மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது. இதன் லீக் போட்டிகளில் சென்னை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியையும், குரோம்பேட்டை எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரி யையும் தலா 2-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி ராணி மேரி கல்லூரி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சென்னை பாரதியார் கலைக்கல்லூரியை 2-0 என்ற நேர் செட்களில் வென்றது. இறுதிப் போட்டியில் 0-2 என்ற நேர் செட்களில் எம்ஓபியிடம் தோற்று, ராணி மேரி கல்லூரி 2வது இடம் பிடித்தது.