துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர். 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியின் நிறைவில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் 80.96 பில்லியன் திர்ஹம்ஸ் (22.04 பில்லியன் டாலர்) தொகையை தங்கள் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதில் மொத்தத்தில் 33.04 பில்லியன் தொகை பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மூலமாகவும், மீதி வங்கிகள் மூலமாகவும் நடைபெற்றுள்ளது.மொத்த தொகையில் 37.2 சதவீதம் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையாகும். இந்தியர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டினர் 10.5 சதவீதம், பிலிப்பைன்ஸ் நாட்டினர் 7.2 சதவீதம், எகிப்தியர்கள் 6.3 சதவீதமும் உள்ளனர். 2018ல் 88 பில்லியன் திர்ஹம்ஸ் தொகையை அனுப்பிய நிலையில், அது தற்போது 80 பில்லியன் திர்ஹம்சாக குறைந்துள்ளது.