×

குரூப்-2 புதிய பாடத்திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் இளைஞர்களை திரட்டி திமுக சார்பில் போராட்டம்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “தமிழ்மொழியையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் ‘குரூப் 2’-க்கான புதிய பாடத்திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டம்  நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழ்மொழித் தேர்வுக்கு இருந்த 150 மதிப்பெண்களை நீக்கி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ‘குரூப்-2’ தேர்வை  நடத்துவதற்கான புதிய பாடத் திட்டத்தை அறிவித்திருக்கும் அதிமுக அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழில் பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு  வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று ஆணையிட்டார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு, இனிமேல் வேலை இல்லை என்று, புதிய பாடத்திட்டத்தைக் கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி தப்பித் தவறி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால்,  முதன்மைத் தேர்வில் கிராமப்புற இளைஞர்கள் வெற்றி பெறவே முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.“தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும்”-“ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்” மொழி பெயர்ப்பு செய்வதற்கு 100 மதிப்பெண்கள் என  நிர்ணயித்துள்ள பார்ட்- ஏ தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்காவிட்டால்-அந்த இளைஞர் 200 மதிப்பெண்களுக்கு எழுதிய “பார்ட்-பி” விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது. “தமிழ்மொழித் தேர்வு ரத்து”, “மொழி பெயர்ப்புக்கு மதிப்பெண்”  ஆகிய கெடுபிடிகள் மூலம், இன்டர்வியூ உள்ள குரூப்-2 பதவிகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத பேராபத்தினை உருவாக்கியுள்ளது அதிமுக அரசு.

தமிழ்மொழிக் கேள்விகள் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால்- பொது அறிவுத் தேர்வில் மட்டுமே தமிழ்மொழி படித்த மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புதிய பாடத்திட்டம் வேறு மாநில இளைஞர்களுக்கும், மத்திய கல்விப் பாடத் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து - தமிழக அரசு பணியிடங்களைத் தாரை வார்ப்பதாக அமைந்துள்ளது.  தமிழக அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி பயின்று- குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வந்து வேலை தேடும் தமிழக இளைஞர்களை விரட்டியடிக்கும் உள் நோக்கத்துடன் அதிமுக அரசு இந்த புதிய பாடத் திட்டத்தை  உருவாக்கியுள்ளது.

தமிழ்மொழியை அவமதிக்கும் ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்- தமிழக இளைஞர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யும் அறிவிப்பை வெளியிட வைத்த முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் தமிழ்நாட்டில் வேலை  இல்லாத தமிழ் இளைஞர்களுக்குத் தேவையா என்ற கேள்வி, வேலை வாய்ப்பின்றிக் காத்திருக்கும் 90 லட்சம் இளைஞர்கள் மனதில் எழுந்துள்ளது. ஆகவே தமிழ்மொழிக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த  குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான புதிய பாடத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். “இன்டர்வியூ உள்ள குரூப் டூ பதவிகள்” மற்றும் “இன்டர்வியூ இல்லாத குரூப் 2ஏ பதவிகள்” ஆகியவற்றிற்கு தமிழ்மொழித் தேர்வினை மீண்டும்  கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மொழியையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் இந்தப் பாடத் திட்டத்தை உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திரும்பப் பெறாவிடில், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களைத் திரட்டி- தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பும், மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

தமாகாவினர் திமுகவில் இணைந்தனர்
சென்னை கிழக்கு மாவட்ட தமாகா மாநில இளைஞர் அணி முன்னாள் செயலாளர் எஸ்.ஏ.ஜாவீத் காதிர் தலைமையில் தமாகா வட்ட முன்னாள் துணைச் செயலாளர்கள் கபீர், பகுதி முன்னாள் பிரதிநிதி என்.அஸாத்கனி, வர்த்தகர் அணி  முன்னாள் இணைச் செயலாளர் பி.ஐ.ஜமீல்அகமது, முன்னாள் வட்ட இளைஞர் அணி சம்சுல் அரிப் மற்றும் அமுல்தாஸ், பாண்டியன், முகமது பாரூக், டில்லிபாபு, புகாரி, அன்புராஜ், மன்சூர், அன்சாரி ஆகியோர் நேற்று சென்னை அண்ணா  அறிவாலயம் வந்தனர். இவர்கள் அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்  பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Group-2 ,government ,stall ,Tamil Nadu ,DMK ,MK Stalin , Group-2 New Syllabus, Youth, Struggle, Government of Tamil Nadu, MK Stalin
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...