சென்னை: பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் இறுதியில் ஓய்வு பெறவிருந்த 6 சார்பதிவாளர்கள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து ஐஜி ஜோதி நிர்மலா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, மனை விற்பனை மற்றும் அடமானம் ஆகிய பத்திர பதிவு நடக்கிறது. அதிக மதிப்புள்ள சொததுக்களை பதிவு செய்ய பதிவு கட்டணம் அதிகம் ஆகிறது. எனவே சில சார்பதிவாளர்கள் வழிகாட்டி மதிப்பை விட குறைத்து பத்திரம் பதிவு செய்வதாக கூறப்படுகிறது. அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு தனிநபர்கள் இதன்மூலம் ஆதாயம் அடைகின்றனர். இது, தணிக்கைப்பிரிவு நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து அந்த அலுவலரிடமோ, சம்பந்தப்பட்ட நபரிடமோ இழப்பு தொகையை வசூலித்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய பதிவுத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த நிலையில் இந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த 6 சார்பதிவாளர்கள் மீது பதிவுத்துறைக்கு இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து ஐஜி ஜோதி நிர்மலா உத்தரவிட்டுள்ளார். அதில், சென்னையில் பணிபுரியும் ஒரு பெண் சாா்பதிவாளர் மீது 17 பி நடவடிக்கை எடுக்கப்பட்டது மட்டுமின்றி அவர் ஓய்வு பெறவும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது, பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.